42 - விஸ்வநாத தாஸ்

  விடுதலை பெற்ற தேசத்தைக் காணத் தன் நடிப்பாலும் பாட்டாலும் மகத்தான தன் போர்க்குணத்-தாலும் தொண்டு செய்த மாபெரும் கலைஞர் விசுவநாததாஸ், மறக்கப்பட்ட பெரும் ஆளுமைகளில் ஒருவர். அவர் காலத்தில் அவருக்கு இணை சொல்லத்தக்க நாடகக் கலைஞர் இந்திய அளவிலேகூட மிகச் சிலரே இருந்தார்கள்.


1886-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் நாளில் சிவகாசியைச் சேர்ந்த சுப்பிரமணிய பண்டிதருக்கும் ஞானாம்பாள் அம்மைக்கும் மூத்த மகனாகப் பிறந்தார் விசுவநாததாஸ்.

 மருத்துவர் வகுப்பைச் சேர்ந்தவர். சித்த மருத்துவத்தைத் தமிழர்களுக்குப் பிரயோகித்து நோய் தீர்க்கும் பணியைச் செய்த வகுப்பு அது. ஆனால் அது தாழ்த்தப்பட்ட வகுப்பாய் இருந்தது தான் வேதனை



விசுவநாததாஸின் இயற்பெயர் தாசரிதாஸ். 

சிவகாசியிலும், பாட்டன் ஊரான திருமங்கலத்திலும், திருப்பாவை பஜனை கோஷ்டியில் பாடுவது என்பதாக தாஸின் இசைப்பணி தொடங்கி இருக்கிறது. சட்டென இசையில் நுட்பங்களைப் பிடித்துக்கொண்டு பாடும் ஆற்றல், தாஸுக்கு மிக இயல்பாகக் கைவந்தது. எட்டு வயதுக்குள் ஊர்ப் பண்டிகை நிகழ்ச்சிகள், கோயில் நிகழ்ச்சிகள் தாஸ் இல்லாமல் நடவாது என்ற நிலையை உருவாக்கினார் சிறுவன் தாஸ். வெண்கலக் குரலால் ஊரைக் கட்டிப்போட்ட தாஸ், காலில் சதங்கையைக் கட்டிக்கொண்டு சப்ளா கட்டையைத் தட்டிக்கொண்டு தாளம் தவறாது ஆடியதை, சிவகாசியில் தோல் வணிகராக இருந்த தொந்தியப்ப நாடார் பார்த்துக் கொண்டே இருந்தார். நாடார், ஒரு நடிகர். நட்டுவாங்கம் அறிந்த ஒரு கலைஞரும்கூட. அருமையான பாடகர். தாஸுக்குள் ஒரு கலைஞன், பிறை நிலவாக ஒடுங்கிக் கிடப்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது. தாஸுக்கு இசைப்பயிற்சியும், நடிப்புப் பயிற்சியும் அளித்தார். இலவச நாடகங்கள் தெருக்கூத்து, என்று வளர்ந்த தாஸ், நாடக கம்பெனியில் சேர்ந்து குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர், 1894-ம் ஆண்டு ‘ராஜபார்ட்’ ஆனார்

நாடக நடிப்பில் ‘ராஜபார்ட்’ என்கிற ஹீரோ வேடமும், ‘ஸ்திரீ பார்ட்’ என்கிற ஹீரோயின் வேடமும் ‘கள்ளபார்ட்’ என்கிற வில்லன் நடிக வேடமும், நாரத வேஷமும் மிக முக்கியமானவையாக இருந்த காலம்.

அக்காலங்களில் (1895-1935) மிக முக்கிய நாடகப் பெரும் கலைஞராக விளங்குகிறார் தாஸ்.

 நல்ல கலைஞர்கள், பெரும்பாலும் மக்கள் நலம் சார்ந்த விடுதலை அரசியல் சார்ந்த கலைஞர்களாகவே இருந்திருக்கிறார்கள். 

1919-முதல் காந்தியின் பிரவேசத்துக்குப் பிறகு, காங்கிரஸ் விடுதலைப் பேரியக்கம், மக்கள் தழுவிய இயக்கமாக மாறுகிறது. இயல்பாகவே மனிதநேயம் மிக்க தாஸும், சுதந்திர தாகம் கொண்ட கலைஞராக மாற்றம் பெற்றுக் கொண்டிருந்தார். 1925-ம் ஆண்டு தூத்துக்குடிக்கு வருகை தந்த காந்தியாரைச் சந்தித்து அவர் முன் பாடும் வாய்ப்பைப் பெற்றார்.. அன்று நடக்க வேண்டிய நாடகத்தைத் தள்ளி வைத்துவிட்டு, காந்தியார் முன் பாடினார் தாஸ். பக்க வாத்தியக்காரரோடு மேடை ஏறிய தாஸ், தேசியப் பாடல்களைப் பாடினார்.

பின்னர் காந்தியாருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் தாஸ்.

 அப்போது ‘காந்தியோ பரம ஏழை, சந்நியாசி’ என்ற பாடலை தாஸ் பாடியதைக் கேட்டு, தன் பெயர் வந்த காரணம் பற்றிப் பக்கத்தில் உள்ள சுத்தானந்த பாரதியிடம் விளக்கம் கேட்டார். 

 நீங்கள் ஏழையாம், சந்நியாசியாம் என்று மொழிபெயர்த்துச் சொன்னா பாரதி.

. மொழி தெரியாவிடினும் இசையால் கவர்ந்திழுக்கப்பட்ட காந்தியார், தாஸை காங்கிரஸ் பேரியக்கத்திற்கு அழைத்தார்.

. ‘காங்கிரஸ் ஏழைகளின் இயக்கம். இதில் பணியாற்றுகின்றவர்களும் எளிய தோற்றம் கொண்டவர்களாக இருக்கவேண்டும்’ என்று தன் கோரிக்கையையும் வெளியிட்டா. இது தனக்கே விடப்பட்ட அழைப்பு மற்றும் யோசனை என்பதை தாஸ் உணர்ந்து. தன் ஆடம்பர பட்டுடைகள், காதில் கழுத்தில், இடுப்பில் விரல்களில் அணிந்திருந்த தங்க நகைகளை விட்டு வெளியேறினார்ர். முரட்டுக் கதரைத் தன் ஆடையாக ஏற்றார். நூறு சதவிகிதம் தன்னை விடுதலை வீரனாக, சுத்த காங்கிரஸ்காரனாக, பின்னர் பதவிக்குப் பறக்காத போராளியாக மாற்றி அமைத்துக் கொணடார். சாகும் வரைக்கும் தேசிய, விடுதலைப் போர்க் குணத்தை இழக்காத மாமனிதராகவே வாழ்ந்தார்.


பொதுவுடமைக் கட்சியால் நடத்தப்பட்ட பத்திரிகையான ‘ஜனசக்தி’, கடும் பொருளாதாரச் சிக்கலில் இருந்தபோது, திண்டுக்கல்லில் 19.6.1938 அன்று நாடகம் நடத்தி, ‘ஜனசக்தி’க்கு ரூபாய் நூறை அன்பளிப்புச் செய்தார் விசுவநாததாஸ். அவருடன் இலவசமாக நடித்துக் கொடுத்தவர், பின்னாளில் பொதுவுடமை இயக்கத் தலைவராக மிளிர்ந்த கே.பி.ஜானகி அம்மாள். தலைவர் ஜீவா, ஜனசக்தியில் இதைக் குறிப்பிட்டுத் தாஸைப் பாராட்டி இருக்கிறார். ‘தேச பக்த நடிகர்’ என்று, தாஸை அழைக்கவும் செய்தார் ஜீவா. தாஸ் அளித்த அன்றைய நூறு ரூபாய், இன்று ஒரு லட்ச ரூபாய்க்குச் சமம்.

விசுவநாததாஸின் அரசியல் தீவிரம், அவருடைய சொந்த வாழ்க்கையைப் பெரிதும் பாதித்தது. முருகனாக வந்தாலும், அரிச்சந்திரனாக வந்தாலும், தாஸ் சுதந்திரப் போராட்டப் பாடல்களைப் பாடிச் சுதந்திர உணர்ச்சியூட்டுவதை ஒரு கடமையாகவே செய்து கொண்டிருந்தார். வெள்ளை நிர்வாகக் காவல்துறை அவரைக் கைது செய்யக் காத்துக் கொண்டிருக்கும், அவர் மேடைக்கு வந்ததுமே மக்கள், ‘வெள்ளை கொக்கு பாடுங்க’ என்பார்கள். பாடிய உடனே தான் கைது செய்யப்படுவோம் என்பதை தாஸ் அறிவார் என்றாலும் பாடுவார். உடனே கைது செய்யப்படுவார். சிறைக்குப் போவார். ஒரு நாள் நாடகம். ஆறு மாதம் அல்லது ஓராண்டு சிறை. இப்படியாக வாழ்ந்து கொண்டிருந்த தாஸ், தன் குடும்பச் சொத்தும் அழிந்தும், குடும்பம் வறுமைப்பட்டுக் கடன்காரராக தாஸ் மாறிக் கொண்டிருப்பதை அறிந்திருக்கவில்லை என்று சொல்ல முடியாது. என்றாலும், இலட்சியம் தேசத்தையே முன்நிறுத்தியது. அக்காலத்திய தலைவர்கள் மேற்கொண்ட சுதந்திரப் பிரசாரத்துக்குச் சற்றும் குறையாத அளவுக்கு தாஸும், சுதந்திரக் கிளர்ச்சி செய்திருக்கிறார்.

தாஸை வைத்து நாடகம் நடத்தும் நாடக கான்ட்ராக்ட்காரர்களை போலீஸ் மிரட்டியதன் காரணமாக, அவருக்கு நாடகங்கள் குறைந்தன. அதோடு ‘நாவிதர்’ சமுதாயத்தைச் சேர்ந்த தாஸோடு நடிக்க மாட்டோம் என்று நடிகைகள் பின்வாங்கினார்கள். இது தாஸை வெகுவாகப் பாதித்தது. மனதளவில் நொந்துபோனார். ஒவ்வொரு நாடகத்திலும், மறக்காமல்,“தாழ்த்தப்பட்ட சோதரைத் தாங்குவோர் உண்டோ, மண்ணில் ஏங்குவோர் உண்டோ” என்ற பாடலைப் பாடிக் கொண்டுதான் இருந்தார். நடிகைகளில், கே.பி.ஜானகி அத்தடையை மீறி அவருடன் நடிக்க முன்வந்தார். பிறகு முத்துலட்சுமி என்ற பிராமண நடிகை. பிறகு மற்றவர்களும் முன் வந்தார்கள்.

இரண்டாம் உலக யுத்தத்தை ஹிட்லர் தொடங்கி வைத்தான். பிரிட்டன் யுத்தத்தில் குதித்தது. பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியர்களை கலந்து கொள்ளாமலேயே இந்தியாவை யுத்தத்தில் ஈடுபடச் செய்த ஜனநாயக மீறல் போக்கை விமர்சித்த காங்கிரஸ் பேரியக்கம், யுத்த நடவடிக்கையில் இந்தியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற முடிவை எடுத்தது. சென்னை ஆளுநர் எர்ஸ்கின், தாஸோடு தொடர்பு கொண்டார். யுத்தத்தை ஆதரித்து மேடையில் பாடினால், தாஸுக்கு ஆயுள் முழுவதும் ஆயிரம் ரூபாய் அரசு தரும் என்று பேரம் பேசினார். இது லட்சியத்துக்கும் மானத்துக்கும் இடப்பட்ட சவால் என்பதை உணர முடியாதவரா தாஸ்? கவர்னர் எர்ஸ்கினின் வேண்டுகோளைப் புறக்கணித்தார், விசுவநாததாஸ்.

அன்றைய மேயர் வாசுதேவ், விசுவநாத தாஸைப் பார்க்க வந்தார். கடன் சுமையால் தாஸின் வீடு ஏலத்துக்கு வர இருந்தது. எல்லாவற்றையும் இழந்த தாஸின் கடைசிச் சொத்து அந்தப் பரம்பரை வீடு ஒன்றுதான். தாஸின் குடும்பம் அங்கேதான் வாழ்ந்தது. இதைத் தெரிந்து கொண்ட மேயர் வாசுதேவ், தாஸைச் சந்தித்தார். பணம் தருவதாகவும், வீட்டையும் மீட்டுத் தருவதாகவும், இழந்த சொத்துக்கள் அனைத்தையும் மீட்டுத் தருவதாகவும், அதற்குரிய பிரதிபலனாக, தாஸ் காங்கிரஸ் பேரியக்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

‘என்னால் புல்லைத் தின்ன முடியாது’ என்றார் தாஸ். 1940 டிசம்பர் 31-ம் நாள் இரவு, ‘வள்ளித் திருமணம்’ நாடகம், சாலக் கொட்டகை எனப்பட்ட ராயல் தியேட்டரில் நிகழ இருந்தது. ஒரு வார நாடக வருவாயில் கடனை ஓரளவு அடைத்து விடலாம் என்று நினைத்திருந்தார் தாஸ். முதல் மூன்று நாட்கள் மேடை ஏறும் உடல் நிலையில் அவர் இல்லை. அன்று இரவு மேடைக்கு முருகன் வேஷத்தில் வந்தார். முதல் காட்சி. முருகன், மயிலாசனத்தில் அமர்ந்து பாடத் தொடங்கினார்.

‘மாயா உலகம்-இம்

மண் மீதே’ என்ற பல்லவி. தொடர்ந்து பாட முடியாமல் அவர் தலை சாய்ந்தது.

விசுவநாததாஸ் முருகன் வேஷத்தைக் கலைக்காமலேயே இறந்துபோனார். அதே வேஷத்தோடே அந்தக் கலைஞர் 1.1.1941-இரவு ஏழு மணி அளவில் மூலக்கொத்தளம் மயானத்தில் எரியுண்டார். அவரை எரித்தது சாதித் தீ என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

தாஸ் வாழ்ந்தது 54 ஆண்டுகள் மட்டுமே. இதில் 29 முறை சிறைக்குச் சென்றார் அந்த வீரத் தியாகி. தேசத்தைத் தவிர, விடுதலையைத் தவிர வேறு எதையும் நினைக்காத அந்தக் கலைஞனை, பின்னால் சுதந்திர இந்தியப் பதவிக்கு வந்தவர்கள் மறந்தே போனார்கள்.

இவரது நாடக்ங்கள்
கோவலன்
வள்ளித் திருமணம்
அரிச்சந்திரா மயான காண்டம்
கதரின் வெற்றி

 கதரின் வெற்றி நாடகத்தில் கதர் ஆடை உடுத்துவதை ஆதரிப்பார்.."கதர்கப்பல் கொடி தோணுதே"  என்ர பாடல் வரும்
மேலும் இவர் நாடகங்களில்
"கரும்புத் தோட்டத்திலே","பஞ்சாப் படுகொலை பாரினில் கொடிது","தாழ்த்தப்படவரி தாங்குவோர் உண்டோ" ஆகிய பாடல்களைப் பாடுவார்.மக்கள் மீண்டும் மீண்டும் பாடச் சொல்வர்


Comments